2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை: பிரபுதேவா

'என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைகள், சினிமாதான் இனி எல்லாமே' என்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.

நயன்தாராவுக்காக மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா. ஆனால் மகன்களைப் பிரிய மனமின்றி நயன்தாராவைப் பிரிந்தார். இப்போது தன் முதல் மனைவியின் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிக்கிறார். அடுத்து மூன்று இந்திப் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'மீண்டும் திருமணம் என்ற யோசனையே எனக்கு இல்லை. என் குழந்தைகள், என் சினிமாதான் இப்போது என் உலகம்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். இப்போதைக்கு நுவ்வொஸ்தானன்டே... இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தி திரைப்படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளேன். ஆனால் நிச்சயம் சென்னைதான் என் இருப்பிட முகவரியாக இருக்கும்.

இந்தியில் திரைப்படம் செய்வது பிடித்திருக்கிறது. காரணம் நிறைய பணம் முதலீடு செய்வதோடு, படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போதே வெளியீட்டுத் திகதியையும் அறிவித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு முழு ஈடுபாடு காட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது' என்றார்.

இதேவேளை, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் நடிகை நயன்தாரா. 

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு, சினிமாவில் தீவிரமாகிவிட்டார் நயன்தாரா. கோடிகளில் சம்பளம். இன்றும் முதலிட அந்தஸ்து என அவர் செழிப்பாகவே உள்ளார்.

தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை சென்றுள்ளார் நயன்தாரா. 

கடைசியாக தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்திலும் தெலுங்கில் 'ஸ்ரீராம ராஜ்யம்' திரைப்படத்திலும் நடித்தார். 

அதன்பிறகு திருமணத்துக்கு தயாரானார். ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். 

தெலுங்கில் நாகர்ஜுன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். 

ஆர்யா, தப்ஸியும் இன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். 

சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பங்கேற்பது தனக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார் நயன்தாரா.