யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில் குறூந்துர ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில் குறூந்துர ரயில் சேவை
யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில், குறுந்தூர ரயில் சேவையொன்று இன்று புதன்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். 
 
அரச மற்றும் தனியார் பணியாளர்களின் நலன்கருதி, இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் தரித்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
 
யாழ்ப்பாணத்திலிருந்து – கிளிநொச்சிக்கு பயணிப்பதற்கான ரயில் கட்டணமாக 90 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, இருக்கைகள் மூன்றாம் தர இருக்கைகளாக இருக்கும் என அவர் கூறினார். 
 
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிளிநொச்சியை காலை 7.35 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து கிளிநொச்சியிலிருந்து காலை 8.05க்கும் புறப்படும் இந்த ரயில், காலை 10.08க்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
 
அதேபோல், மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், 5.14 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும். 
 
தொடர்ந்து கிளிநொச்சியிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த குறுந்தூர சேவை ரயில், இரவு 7.42 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.