ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா இன்றேல் முடியாதா என்பது தொடர்பிலான வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தால், திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
இதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் எம்.எம். ஜயசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நேற்று புதன்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதன்படி சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயம் பற்றிய எழுத்து மூலமான தமது வாதத்தை நாளை வெள்ளிக்கிழமை பி.ப 3மணிக்கு முன்வைக்கும்படி கோரப்பட்டுள்ளது.