தளபதி விஜய்யுடன் கைகோப்பாரா இசைஞானி

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களுக்கு பின்னர் இசைஞானியின் இசைக்கு மீண்டும் ஒரு எதிபார்ப்பு எழும்பியுள்ளது. இசைஞானியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் என்று வேறு சொல்கிறார்கள். அதனால் பல இயக்குனர்கள் அவர் வீட்டு வாசல் கதவை மீண்டும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

இப்பொழுது ஏ.எல்.விஜய்யின் படத்திற்கு அப்புறம் அமீரின் கண்ணபிரான் படத்தில் நடிக்க இளையதளபதி விஜய் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் வதந்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. விசாரித்ததில் அதில் உண்மை எதுவும் இல்லை எனத் தெரிகிறது. ஆதிபகவான் இசை வெளியீட்டில் மும்முரமாக இருக்கும் அமீருக்கு யுவனுடன் தவிர வேறு யாருடனும் பணியாற்றும் எண்ணம் இல்லை என அமீருக்கு நெருங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கத்தி அரிவாள் வன்முறை போன்ற படங்களுக்கு இசையமைக்கும் எண்ணம் இளையராஜாவுக்கு இல்லை என அமீரே ஒரு முறை பேட்டியில் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை “என்னைத் தாலாட்டா வருவாளா” தந்த அந்த சுகத்தை அனுபவிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இந்த வதந்தி உண்மை ஆக வேண்டும் என பல விஜய் ரசிகர்கள் அவர்களது பேஸ்புக் பக்கங்களில் தவம் இருக்க ஆரம்பித்தது விட்டார்கள்.

சின்னப்பையன்: ராஜாவின் இசை மட்டும் இல்லாமல் எண்ணமும் தெய்வீகம்தான்.