தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். 

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. 

இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது போன்றதே, மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதும். 

இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமைக்கு செல்வார் சரத் பொன்சேகா தம்மை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதேநிலைமை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்படவுள்ளது.

 அது குறித்து தாம் கவலை அடைவதாக ஜனாதிபதி கூறினார். மேலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது வீட்டில் ஒரு மைத்திரியும் வெளியில் ஒரு மைத்திரியும் உள்ளனர். 

ரணிலின் மனைவி மைத்திரியையும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.