தமிழினத்துக்காக போராடி வீர காவியமான மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம் : அனந்தி சசிதரன்

தமிழினத்துக்காக போராடி வீர காவியமான மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம் : அனந்தி சசிதரன்

"தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்; இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்." 

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் தினமான மாவீரர் தினம் வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை தமிழர்கள் எவரும் அனுஷ்டிக்கக் கூடாது என இராணுவம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே திருமதி அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது அவர் மேலும் தகவல் வெளியிடுகையில்: "நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. 

அரசாங்கமும் இராணுவமும் எங்கள் இனத்துக்காகப் போராடி தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என இந்த வருடமும் இரும்புக் கரம் கொண்டு தடுக்கின்றனர். 

ஆனால் என்றோ ஒரு நாள் இந்த நாளை எந்தத் தடங்கலும் இன்றிக் கொண்டாடும் நிலை வரும். மாவீரர் தினத்தைக் அனுஷ்டிக்க முற்பட்டவர்களை கைது செய்து இராணுவம் அச்சுறுத்தியது. 

அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சாது 27 ஆம் திகதி வீடுகளில் பிரார்த்தனை செலுத்தினர். 

இவற்றையும் இராணுவம் தடுக்க முனைந்தது - முனைகிறது. ஆனாலும் அவர்களால் இது முடியாது. ஏனெனில் மக்களின் மனங்களில் வாழ்கின்ற மாவீரர்களை எவரும் வெளியே தூக்கி எறியமாட்டர்." - என்றார்.