சீனாவில் மண்சரிவு: ஒரு கிராமமே மண்ணோடு மண்ணானது!

சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மலைப்பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள கௌபோவ் மலைக்கிராமத்தில் இன்று காலை திடீரென சேறு சகதிகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. 

ஆறு போல் சேறும் சகதியும் அடித்து வரப்பட்ட இந்த மிகமோசமான நிலச்சரிவுக்கு அந்த மலைக் கிராமம் அடியோடு அடித்து செல்லப்பட்டு மூழ்கிப்போனது. இதில் அந்த கிராமத்தில் இருந்த குழந்தைகள் முதியவர் என அனைவரும் சேறுசகதிக்குள் சிக்கினர். 

மண் தோண்டும் நவீன எந்திரங்களுடன் 1000 மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். இதில் இறந்துபோன 42 பேரின் உடல்களை மீட்புப்படையினர் வெளியே எடுத்தனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் இந்த சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

வரும் வாரங்களில் மேலும் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் என அரசு எச்சரித்துள்ளது. இதனால் அனைத்து அரசு எந்திரங்களும் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.