காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: 18 பேர் கொலை

காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது, இலக்கு தவறி நடந்த தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது.

முன்னதாக, இலக்குத் தவறி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று வெளியிட்ட தகவல் பற்றி ஆராய்ந்துவருவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுது.

ஆனால் இப்போது அந்த தகவலை மறுத்துள்ள இஸ்ரேல், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவர் தங்கியிருந்த வீட்டின்மீது சரியாக இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல்கள் இன்று 6 நாளாக தொடர்கின்றன.

நேற்றிரவு முதல் நடந்த தாக்குதல்களில் காசாவில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடைசி மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர்.

ஹமாஸ் ஆயுததாரிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தொடர்ந்தும் ராக்கெட் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

நேற்றிரவு முழுவதும் காசாவிலிருந்து ஒரு ராக்கெட் குண்டே ஏவப்பட்டுள்ளது.

ஆனால் இன்று காலை மீண்டும் காசாவுக்குள்ளிருந்து ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்ததாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த மோதல்களில் காசாவில் 90 பேர், பெரும்பாலும் பொதுமக்கள், கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேலும் ஹமாஸும் உடனடி மோதல் தவிர்ப்புக்கு வரவேண்டுமென்று ஐநா தலைமைச் செயலர் பான்-கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல்-காசா வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்காக பான் கி மூன் கெய்ரோ செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.