இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் முடிவுக்கு வந்தது

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது எரிகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், குடியிருப்பு பகுதி ஒன்று சேதமடைந்து, இஸ்ரேலியர்கள், மூன்று பேர் பலியாயினர். இதையடுத்து, இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை துவக்கியது.

காசா நகரத்தின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், நேற்று வரை, 110 பேர் பலியாயினர். ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் பங்குக்கு, எல்லை பகுதியிலிருந்து எரிகணை தாக்குதலை நடத்தினர். "பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை, இஸ்ரேல், உடனடியாக நிறுத்த வேண்டும்" என, எகிப்து அதிபர் முகமது முர்சி, கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படுத்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இஸ்ரேல் சென்றார். இதற்கிடையே, சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது, ஹமாஸ் அமைப்பினரிடம் தான் உள்ளது.

அவர்கள் அமைதியை விரும்புகின்றனரா அல்லது சண்டையை விரும்புகின்றனரா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, இஸ்ரேலிய பிரதமர் நேதன் யாகு கூறியிருந்தார்.

அமைதியை விரும்புவதாக, ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். துருக்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இஸ்ரேலும், காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல், இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.