இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ… விஜய் ஆன்டனியின் புது ரூட்!

 

இப்போதைக்கு நான் தயாரிக்கும் படங்களில் நானே ஹீரோவாக நடிப்பதென முடிவு செய்துள்ளேன் என்கிறார் நான் படம் மூலம் ஹீரோவாகிவிட்ட விஜய் ஆன்டனி.

வாயேஜ் எக்ஸ்போ எனும் பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுற்றுலா பயண கண்காட்சி வரும் அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் நடக்கின்றன.

இந்த கண்காட்சியில் முதல் முறையாக பாஸ்போர்ட் கவுன்டர் திறக்கப்பட்டு, ஆன் தி ஸ்பாட் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக விமான நிறுவனங்கள், விமான டிக்கெட்டுகளை சலுகை விலையில் இந்தக் கண்காட்சியில் பொது மக்களிடையே நேரடியாக விற்பனை செய்ய உள்ளன.
இந்த நிகழ்ச்சியின் லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் ஆன்டனி பங்கேற்று லோகோவை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியை நடத்தும் ஜெ செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் விஜய் ஆன்டனி பேசுகையில், “பொதுமக்களுக்கு பெரிய விழிப்புணர்வு தரும் கண்காட்சி இது. இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் தமிழில் தற்போது ‘திருடன்’, ‘சலீம்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
இப்படங்களை நான் தயாரிக்கவும் செய்கிறேன். இப்போதைக்கு எனது சொந்த தயாரிப்பிலேயே நடிக்க முடிவு செய்துள்ளேன். நான் ஒரு நல்ல நடிகன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்த பிறகு, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன்.

எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல புதிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என அறிமுகப்படுத்தப் போகிறேன்,” என்றார்.