இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களில் 13பேரை, டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.
 
அத்துடன், மீனவர்களில் ஒருவராக கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். 
 
இந்திய இராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து 3 படகுகளில் வந்த இந்திய மீனவர்களே காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் 14 வயது சிறுவன் ஒருவனும் அடங்கினார். 
 
தொடர்ந்து, மீனவர்களும் படகுகளும் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்ததை அடுத்து, அவர்களை  நீரியல்வளத்துறை அதிகாரிகள், பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவுலு பிறப்பிக்கப்பட்டது.