இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு!

ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது  “மொழிப்பிறழ்வு” ( “MISINTERPRETATION”) எனும் குறுந்திரைப்படம், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளதாகும்.
 
இப்படத்தில், ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து, சரியான கதை தெரிவுடனும், தெளிவுடனும், கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள்.
 
“MISINTERPRETATION” பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால், காலத்துக்கு தேவையான கதை, ஈழத்து உறவுகளின் உண்மையை கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதைவிட சிறந்த ஒளிப்பதிவு, பின்ணணி இசை, காட்சி அமைப்பு என்று தமிழ் சினிமாவைத் தாண்டி சிறப்பாக செய்துள்ளார்கள், நடித்த கலைஞர்கள் சிறப்பாக தங்களது பங்கை செய்து சிறப்பித்து உள்ளார்கள். ஈழத்து கலைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுக் கலைஞர்களையும் சிறந்த முறையில் இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
 
இவர் பிரான்ஸ் நாட்டில் இயக்கி நடித்த “தொடரும்” எனும் ஈழத்து மக்களின் பிரிவுளையும் தேடல்களையும் சித்தரிக்கும் மற்றுமொரு குறுந்திரைப்படம் இதே போட்டியில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
இவருடைய வேறு பல படைப்புகள் ஏற்கனவே சாதனை படைத்திருப்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
 
அவுஸ்திரேலியாவில் முதல் தமிழ் திரைப்படமாக இவர் இயக்கிய “இனியவளே காத்திருப்பேன்” எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
 
இவரின் அடுத்த படைப்பாக பல நாடுகளில் இருந்து ஈழத்து, வெளிநாட்டு, இந்திய கலைஞர்களையும் தொழில்நுட்பவாதிகளையும் உட்கொண்டு ஈழன் இளங்கோ கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவிருக்கும் “பாரி” எனும் முழுநீள திகில் திரைப்படம் விரைவில் சாதனை படைத்து ஈழத்து தமிழர் திரைப்பட வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
 
முயற்சியில் வெற்றிபெற ஈழன் இளங்கோவையும் குழுவினரையும் வாழ்த்துகிறோம்.