அல்-கொய்தா சந்தேகநபரான இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

அல்-கொய்தா சந்தேகநபரான இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்
மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவின் சந்தேகநபரென கூறப்படும் இலங்கை பிரஜையான மொஹமட் உசையின் மொஹமட் சுலைமான், நேற்று புதன்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
 
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே இவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
 
இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றஞ்சாட்டின் பேரிலேயே அவர், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். 
 
மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக அவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
 
இந்தியாவில் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இலங்கையரான ஷாகீர் உசைன் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இவர்,  கோலாலம்பூரில் வைத்து கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டார்.
 
இலங்கை பிரஜையான மொஹமட் உசையின் மொஹமட் சுலைமானிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியிருந்த போதிலும் அதனை மறுத்த மலேசியா, அவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.
தென்னிந்தியாவிலுள்ள தூதரகங்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முயற்சித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.