13 வயதுச் சிறுமி தாயாவதற்கு காரணமான சந்தேகநபர் கைது

13 வயதுச் சிறுமி தாயாவதற்கு காரணமான சந்தேகநபர் கைது

யாழ்.குடாநாட்டில் 13 வயதுச் சிறுமி தாயாவதற்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில் 21 வயது இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் 18 ஆம் விடுதியில் வலி.மேற்கைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்தது.

குழந்தை இறந்து பிறந்ததை அடுத்து அவர் 20 ஆம் விடுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுமி 26 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

இருப்பினும் இறந்து பிறந்த சிசுவின் உடல்கூற்றுப் பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. அத்துடன் சிறுமி தாயானமைக்குப் பொறுப்பானவர் யார் என்பது பற்றிய விசாரணைகளோ, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளோ எதுவும் மேற்கொள்ளப்படாமலே சிறுமி வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இறந்து பிறந்த சிசுவின் உடல் கூற்றுப் பரிசோதனை நடத்தப்படாமை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 4 ஆம் திகதி குறித்த 13 வயதுச் சிறுமியிடம் விசாரணை நடத்திய வட்டுக்கோட்டைப் பொலிஸார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் முற்படுத்தியிருந்தனர். விசாரணைகளை அடுத்து சிறுமியின் கர்ப்பம் தொடர்பில் 21 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.