“ஃப்ரெண்ட்ஷிப் டே” ஸ்பெஷல்!!!

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட சிறந்தது நட்பே என்று கூட சொல்லலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் தோற்றால் மட்டுமே உயிர் கொடுப்பார்கள். ஆனால் உண்மையான நட்பைக் கொண்டவர்கள், நண்பனுக்கு எந்த நேரத்திலும் உயிரைக் கொடுப்பார்கள். அந்த அளவு நட்பானது புனிதமானது. மேலும் நட்பு எத்தனை கடல் தாண்டினாலும், எத்தனை மலை தாண்டிப் போனாலும் அதற்கு அழிவு என்பதே இல்லை.
அத்தகைய நட்பின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக, எத்தனையோ தினத்தை கொண்டாடும் நம் மக்கள், நண்பர்களுக்கு என்று ஒரு தினத்தை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன? அந்த நண்பர்களுக்கான தினம் தான் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை. அந்த தினத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் எல்லாம், கைகளில் நண்பர்களுக்கு “ஃப்ரெண்ட்ஷிப் டேக்” கட்டி கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி இருந்த நட்பு, படிப்புகள் எல்லாம் முடிந்து, வேலை என்று சென்றதும், தங்கள் நண்பர்களை காண நேரம் கூட கிடைக்காத அளவு போய்விடும். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களை, ஃபோன், மெயில், இன்டெர்நெட்டில் இருக்கும் ஃபேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதை நினைத்தால் “எப்படி இருந்த நட்பு இப்படி ஆகிவிட்டது” என்பது போல் ஆகிவிட்டது. இவ்வாறு நண்பர்களை காண இத்தனை தடை இருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே…” என்று தான் பாடிச் செல்ல வேண்டிய நிலை கூட வந்துவிடும்.
ஆகவே இந்த நண்பர்கள் தினத்தன்று, லீவு தானே என்று நினைத்து, எந்த ஒரு சோம்பேறித்தனமும் படாமல், உங்கள் நண்பர்களை சென்று பார்த்து, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து, அவர்கள் கையில் ஒரு சிறிய “ஃப்ரெண்ட்ஷிப் டேக்”-ஐ கட்டி, உங்களது பழைய கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தி மகிழ வையுங்கள்.
ஒரு வேளை இதற்கு தான் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுகிறார்களோ, என்னவோ!!!
என்ன நண்பர்களே!!! “ஃப்ரெண்ட்ஷிப் டே” கொண்டாட ரெடியா இருக்கீங்களா!!!