ராஜிவ்காந்தி கொலை வழக்கு: இலங்கை, மலேசியாவிடம் கேபி குறித்து இந்தியா கேள்வி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாபாவிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று பேர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜிவ் கொலை தொடர்பாக சிபிஐ மற்றும் இந்திய உளவு அமைப்பினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இக்கொலை தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொள்ள எம்டிஎம்ஏ எனப்படும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த பட்டியலில் கேபியும் இடம்பெற்றிருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கேபி கடந்த அக்டோபர் 17ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவினர் அண்மையில் இலங்கை சென்று கேபியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆனால் தாம் அப்போது இலங்கைக்கும் மலேசியாவுக்குமாக பயணித்துக் கொண்டிருந்ததால் தமக்கு எதுவும் தெரியாது என்று கேபி கூறியிருக்கிறார்.

ஆனால் ராஜிவ்கொலையில் கேபிக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பல்நோக்கு கண்காணிப்புக் குழுவினர் கூறியுள்ளனர். இதனால் மலேசியா மற்றும் இலங்கையில் கேபி தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டிருக்கின்றனராம்.

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட கேபி, இலங்கையின் வடகிழக்கில் நெர்டோ என்ற அமைப்பின் மூலம் புனர்வாழ்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.