ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா?

ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா?
லிங்காவுக்கு பிறகு, கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் நடித்து வெளியான ‘பங்காரத மனுஷ்யா’ என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து பெங்களூரிலுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவது: லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் முன்பாக என்னுடன் சேர்ந்து பங்காரத மனுஷ்யா திரைப்படத்தை ரஜினி பார்த்தார்.
 
இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டியதுதானே என்று ரஜினியிடம் அப்போது நான் கேட்டேன். யோசித்த ரஜினியும், ஓ.கே, நானே நடிக்கிறேன் என்று தெரிவித்தார்.அந்த காலகட்டத்தில்தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா திரைப்பட கதையை ரஜினியிடம் சொன்னார்.
 
கதை பிடித்துப்போனதால் லிங்காவில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். இதன்பிறகு எனக்கு போன் செய்து, முதலில் லிங்கா படத்தில் நடித்து முடித்துவிடுகிறேன். அதன்பிறகு பங்காரத மனுஷ்யா படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்தார், இவ்வாறு ராஜ் பகதூர் கூறினார்.
 
பங்காரத மனுஷ்யா அதாவது தங்கமான மனிதன் என்ற பொருளுள்ள இந்த படம் 1972ல் வௌியானது. சித்தலிங்கய்யா இயக்கியிருந்தார். இப்போது 42 ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்த படம் வெளியான போது பெங்களூர் சிட்டி பஸ்சில் ரஜினி கண்டக்டராகவும், ராஜ்பகதூர் சாரதியாகவும் பணியாற்றினர்.
 
அப்போது இருவருமே சேர்ந்து தியேட்டரில் பங்காரத மனுஷ்யா படத்தை பார்த்துள்ளனர். படித்த சமூகத்தை விவசாயத்தை நோக்கி ஈர்க்க செய்யும் வகையில் அந்த திரைப்படத்தின் கதை இருப்பதால், இப்போதைய சூழ்நிலைக்கும் பங்காரத மனுஷ்யா பொருந்திப்போகும் என்று ரஜினி நம்புவதாக கூறப்படுகிறது.