யாழில் 3 மாதங்களில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் பதிவு – யாழ் பொலிஸ்

யாழில் 3 மாதங்களில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் பதிவு – யாழ் பொலிஸ்

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரெரா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர்,

‘அண்மைக்காலமாக யாழ்குடா நாட்டின் பல்வெறு பிரதேசங்களில் நடைபெறுகின்ற மோதல்களின் போது இடம்பெற்றதான அடிப்படையில் 500 வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 6 பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழில் என்றும் இல்லாதவாறு பாலியல் வன்புணர்வச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரத்த உறவுகளினால் சிறுமியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கோப்பாய் பகுதியில் 15 வயது நிரம்பிய பாடசாலைச் சிறுமி 31 வயதுடைய நபரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்டுள்ளார். கொடிகாமப் பகுதியில் பொரிய தாயாரின் கணவனினால் 18 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ள இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்’ என்று அவர் மேலும் கூறினார்.