மேற்கிந்திய தீவுகளுக்கு முதல் வெற்றி - அரையிறுதிக்கு தகுதி பெறுமா?

மேற்கிந்திய தீவுகளுக்கு முதல் வெற்றி - அரையிறுதிக்கு தகுதி பெறுமா?

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் பங்காளதேஷை எளிதில் தோற்கடித்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் வெற்றியை பெற்றது. 

5-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேஷில் நடந்து வருகிறது. இதில் தற்போது நடந்து வரும் சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி குரூப்1-ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 2-ல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்காளதேஷ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 

இந்த நிலையில் மிர்புரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள், போட்டியை நடத்தும் பங்காளதேஷூம் (குழு 2) சந்தித்தன. நாணய சுழற்சியை வென்ற பங்காளதேஷ் த லைவர் முஷ்பிகுர் ரம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து வெய்ன் சுமித்தும், கிறிஸ் கெய்லும் மேற்கிந்திய தீவுகள் இன்னிங்சை தொடங்கினர். ‘சிக்சர் மன்னன்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் வழக்கத்திற்கு மாறாக நேற்று தடுமாறினார். கொஞ்சம் எழும்பி வரும் பந்துகளை எளிதில் அடிப்பதில் கில்லாடியான கெய்ல், மெதுவான இந்த ஆடுகளத்தில் பந்தை எப்படி விளாசுவது என்பது தெரியாமல் திணறினார். 

கெய்ல் ஆமை வேகத்தில் ஆடினாலும், வெய்ன் சுமித் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் சோஹக் காஜியின் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் (11.5 ஓவர்) சேர்த்த போது இந்த ஜோடி பிரிந்தது. சுமித் 72 ஓட்டங்களில் (10 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த சிமோன்ஸ் டக்-அவுட் ஆனார். 

நீண்ட நேரம் களத்தில் நின்றும் வாணவேடிக்கை காட்ட முடியாமல் தவித்த கெய்ல் அதன் பிறகு ஒரு சில ஷாட்டுகளை அடித்தார். என்றாலும், கெய்லால் ரன் வேகம் தளர்ந்தது என்று சொல்லும் அளவுக்கே அவரது ஆட்டம் அமைந்தது. 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 48 ஓட்டங்கள் எடுத்த அவர் 19-வது ஓவரில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அதே சமயம் கெய்லை கட்டுப்படுத்திய பங்காளதேஷ் அணி, களத்தடுப்பை கோட்டைவிட்டது. அற்புதமான சில கேட்ச்சுகளை பிடித்த தமிம் இக்பாலை தவிர்த்து, மற்ற வகையில் பீல்டிங் சொதப்பலாகவே இருந்தது. ஓட்டை பீல்டிங்கால் மட்டும் குறைந்தது 15 ஓட்டங்களை வங்காளதேசம் கூடுதலாக விட்டுக்கொடுத்தது. அது மட்டுமின்றி அனாவசியமாக சென்ற எக்ஸ்டிராக்களும் (19) மேற்கிந்திய தீவுகள் சவாலான ஸ்கோரை நோக்கி பயணிக்க உதவியது. இதற்கு மத்தியில் 20-வது ஓவர் மட்டும் பங்காளதேசத்திற்கு ஆறுதல் அளித்தது. 

கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹூசைன், அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஒரு ரன்-அவுட்டும் நிகழ்ந்தது. 

20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்ததது. சாமுவேல்ஸ் (18 ஓட்டங்கள், 22 பந்து), தலைவர் டேரன் சேமி (14 ஓட்டங்கள், 5 பந்து, 3 பவுண்டரி) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். 

பின்னர் 172 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்காளதேஷ் பேட்ஸ்மேன்களால், சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கிரிஷ்மர் சான்டோகியை சமாளிக்க முடியவில்லை. அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் தமிம் இக்பால் (5 ஓட்டங்கள்), ஷகிப் அல்-ஹசன் (0), கேப்டன் முஷ்பிகுர் ரம் (22 ஓட்டங்கள்) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், வங்காளதேசத்தால் எந்த ஒரு தருணத்திலும் நிமிர முடியவில்லை. 

அந்த அணி 19.1 ஓவர்களில் 98 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. பத்ரீ 4 விக்கெட்டுகளும், சான்டோகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்த வெற்றியின் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 28-ந் திகதி அவுஸ்திரேலியாவையும், அதே நாளில் பங்காளதேஷ் அணி இந்தியாவையும் சந்திக்கிறது.