மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட இலக்கத்தகடு அறிமுகமாகிறது

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

முதற்கட்டமாக முச்சக்கர வாகனங்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இத்திணைக்களம் முன்னர் 'ஸ்ரீ' எழுத்து கொண்ட இலக்கத்தகட்டை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஸ்ரீ நீக்கப்பட்டு ' - ' இடப்பட்டது. அதன்பின் இரு ஆங்கில எழுத்துக்கள் கொண்ட இலக்கத்தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

01.08.2000 ஆம் திகதியிலிருந்து 30.06.2012 ஆம் திகதிவரை இத்திணைக்களம் 3,046,008 ஆங்கில எழுத்து கொண்ட இலக்கக் தகடுகளை வழங்கியுள்ளது.

புதிய மூன்று ஆங்கில எழுத்து இலக்கத்தகடு திட்டத்தின்மூலம் 6.4 மில்லியன் வாகனங்களை பதிவு செய்ய முடியும். தற்போதைய இரு ஆங்கில எழுத்து இலக்கத்தகடு தொடர் முடிவடைந்தவுடன் ஏனைய வாகனங்களுக்கும் மூன்றெழுத்து இலக்கத்தகடுகள் வழங்கப்படவுள்ளன.