முதல போட்டியிலேயே மண்னைக் கவ்விய ஸ்பெயின்

முதல போட்டியிலேயே மண்னைக் கவ்விய ஸ்பெயின்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. 

கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது. 

ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி சால்வடோர் நகரில் நடைபெற்றது. 

ஆட்டத்தின் போது அவ்வப்போது மழையும் பெய்தது. 

இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்ஃபோன்ஸோ பெனால்டி முறையில் ஒரு கோல் அடிக்க அந்த அணி 1-0 எனும் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நெதர்லாந்து அணியின் ராபன் வான் பெர்சி ஒரு கோலடிக்க இடைவேளை நேரத்தில் இரு அணிகளும் 1-1 எனும் நிலையில் இருந்தன. 

இடைவேளைக்கு பிறகு மழையில் ஆட்டம் தொடங்கிய பிறகு, 53 ஆவது நிமிடத்தில் அயேன் ரோபென் நெதர்லாந்து சார்பில் ஒரு கோல் அடிக்க அந்த அணி 2-1 என்று முன்னிலை பெற்றது. 

அப்படியான வலுவான நிலையில், ஸ்பெயினின் எதிர் தாக்குதலை திறமையாக சமாளித்த நெதர்லாந்து அணி, அதிரடியாக ஒரு நகர்வை முன்னெடுத்து 64 நிமிடத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் டி வெர்ஜ் ஒரு கோலடிக்க 3-1 எனும் நிலையை எட்டியது. 

நடப்பு சாம்பியனான ஸ்பெயின் தமது ஆட்டத்தின் உத்தியை மாற்றியமைத்து நகர்வுகளை மேற்கொண்ட போதிலும், நெதர்லாந்து அணியின் வியூகத்தை உடைத்து முன்னேற முடியவில்லை. 

ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ராபன் வான் பெர்சி மேலும் ஒரு கோலை அடிக்க, நெதர்லாந்து அசைக்க முடியாத வகையில் 4-1 என வலுவான நிலையை பெற்றது. 

சவப்பெட்டியில் கடைசி ஆணி என்று கூறும் வகையில் அயேன் ரோபென் நெதர்லாந்துக்காக தனது இரண்டாவது கோலை 79 ஆவது நிமிடத்தில் அடிக்க ஸ்பெயினால் 5-1 எனும் தோல்வியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டது 

இந்தப் படுதோல்வியை அடுத்து ஸ்பெயின் அடுத்து வரும் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.