மாறு வேடத்தில் 7 வருடம் தலைமறைவாக இருந்த கொலையாளி கைது

மாறு வேடத்தில் 7 வருடம் தலைமறைவாக இருந்த கொலையாளி கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் பொலிஸ் சரகம், தென்னம்புலம், நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரதுமகன் பாபு (வயது 35). திருமணம் ஆகாதவர். 

இவர் கடந்த 2007–ம் ஆண்டு அப்பகுதி அ.தி.மு.க. பிரமுகரை வெட்டிக் கொன்றார். இதுதொடர்பாக கரியாப்பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் பாபு மீது கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளது. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர். அவரது உறவினரிடம் விசாரித்தபோது இறந்து விட்டதாக கூறினர். 

ஆனாலும் போலீசார் அவரை தேடும்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாபு மாறுவேடத்தில் மானேஜராக வேலைபார்த்து வருவதாக கரியாப்பட்டிணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இன்ஸ்பெக்டர் மகேஷ், சப்–இன்பெக்டர்கள் துரைராஜ், பக்கிரிசாமி மற்றும் போலீசார் வெள்ளியங்கிரி விரைந்து சென்றனர். அங்கு தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். 7 வருடத்திற்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.