பெண்ணின் கைப்பை, தொலைபேசி திருட்டு

வல்லிபுர ஆழ்வார் கோயில் வழிபாட்டிற்குச் சென்றிருந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கைப்பையுடன்  சேர்த்து 30 ஆயிரம் ரூபா பணத்தையும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு கைத் தொலைபேசியையும் இழந்துள்ளார். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து விட்டு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய உறவினர் சகிதம் நேற்று வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு வழிபாட்டிற்குச் சென்றிருந்தார். வழிபாட்டினை முடித்த பின்னர் அங்குள்ள அன்னதான மண்டபம் ஒன்றில் இவர் நின்றிருந்தார்.
தனது கைப்பையினை அருகில் வைத்து விட்டு உறவினருடன் உரையாடிக் கொண்டிருந்தவேளை இதனை அவதானித்த திருடன் தந்திரமாக அதனை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர்  அதிலிருந்த பணத்தையும், கைத் தொலைபேசியையும் எடுத்த பின்னர் கைப்பையினை அருகில் உள்ள பற்றைக்குள் எறிந்து விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான  விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.