பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து படை புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார் என்ற இளைஞர் நீண்ட காலத்தின் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில் தயாருடன் கடந்த இரவு நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் சென்றிருக்கின்றார்.
அவர் சென்ற போது படை புலனாய்வாளர்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றனர். ஆலயத்தின் உள் வீதியில் சென்ற போது அவரது கையில் புலிச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்ததை அவதானித்ததும் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியதுடன் யாழ்.காவல்துறையினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
குறித்த இளைஞர் யாழ்.காவல்துறைநிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. அவர் தற்காப்புக் கலையில் கை தேர்ந்தவர் என்றும் அதில் பங்கேற்பதற்காகவே பச்சைகுத்திக் கொண்டிருந்ததாகவும் தாயார் தெரிவித்திருக்கின்றார்.