பிரதமரான பின் மோடியின் காங். மீதான முதல் குற்றச்சாட்டு

பிரதமரான பின் மோடியின் காங். மீதான முதல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

பானாஜியில் பாஜக தொண்டர்களிடையே நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

நான் பதவியேற்கும்போது, நாட்டின் கஜானாவை காங்கிரஸ் அரசு காலிசெய்துவிட்டது. நிதி நிலைமை அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

தற்போது எனது முக்கிய பணி நிதிநிலைமையை சீர்செய்வது. இதற்காக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு கடும் எதிர்ப்பு எழும் என்றாலும், நோய் குணமனடைய கசப்பு மருந்து அளிக்கப்படுவதுபோல்தான் இந்த நடவடிக்கை. 

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சியால் இவ்வாறு உள்ளது. இதனை சீர்செய்ய நான் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன். தாய் தனது குழந்தைகளுக்கு கசப்பான மருந்து தருவதுபோல் கடுமையான சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் என்னை சிலர் குறை கூறக் கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் பின்னாளில் அதன் பலனை அனுபவிக்கும்போது என்னை புரிந்து கொள்வார்கள். 

பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்றார். 

பிரதமரான பின்னர் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசை நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.