பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி அனுமதி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி
பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி., சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விரைவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளைத் தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வந்ததுடன் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரிக்கையையும் வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த ஐ.சி.சி., பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,
இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும்.
கலர் பந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் விளையாட வேண்டும், போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் நிறம், வகை, தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை இரு நாட்டு கிரிக்கெட் சபைகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சமீபத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ருவென்ரி போட்டிகளில் சில புதிய விதிமுறைகளை ஐ.சி.சி., அறிவித்தது. இதன்படி பவர்பிளே, களத்தடுப்பு விதிமுறை, சோர்ட் பிட்ச் பந்துகளை வீசுதல், அம்பயர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்தல், நோ-போல், தாமதமாக பந்துவீசுதல், சூப்பர்-ஓவர் முறை போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்தது.

இந்த மாற்றங்கள் இன்று முதல் பின்பற்றப்படும். இதன்படி இன்று பல்லேகெலேயில் நடைபெறவுள்ள ருவென்ரி ருவென்ரி போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். என்றுள்ளது.