தமிழகத்தில் பல மணி நேர தொடர் மின்வெட்டால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள நோய்தடுப்பு மருந்துகள் வீரியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தட்டம்மை, போலியோ, போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவை குறிப்பிட்ட குளிர் நிலையிலேயே இருந்தால் தான் முழு மருத்துவ பயன் கிடைக்கும். தற்போது தொடர்ச்சியாக பல மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் குளிர்சாதனப் பெட்டியில் குறிப்பிட்ட வெப்ப அளவு மாறுபடுகிறது.
அதனால் மருந்துகள் முழு வீரியத்துடன் செயல்படுமா? என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தவிர பிற அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் இருந்தும் டீசல் வழங்காததால் இருளில் தான் உள்ளன.
எனவே அரசு இது போன்ற மருத்துவமனைகளுக்கு டீசல் தட்டுப்பாடு இன்றி வழங்கினால் மின்தடை ஏற்பட்டாலும் உயிர்காக்கும் மருந்துகள் வீரியம் குறையாமல் பாதுகாக்க முடியும் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.