ஜனவரியில் இலங்கை செல்வதாக நவநீதம்பிள்ளை ஸ்டாலினிடம் தெரிவிப்பு

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான டெசோ மாநாட்டு தீர்மானங்கள் அடிப்படையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தின் துணை பொதுச் செயலாளர் யான் லியாசனை சந்தித்து ஏற்கனவே அளித்திருந்தனர்.

அதில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைத் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று (06) ஜெனிவா நேரப்படி காலை 11.30 மணியளவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளையை நேரில் சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக பேசினர்.

அப்போது இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை தொடர்பான கருணாநிதி கையெழுத்திட்டு அளித்திருந்த அறிக்கையினை அவரிடம் அளித்து, இலங்கையில் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி விவரமாக எடுத்துக் கூறினர். இலங்கையில் நடைபெற்ற போரினால் விதவைகளாக்கப்பட்ட 90 ஆயிரம் விதவைப் பெண்களின் பரிதாப நிலை, மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படாதது.

கடந்த 3 1/2 ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் சொந்த மண்ணிலேயே நிம்மதியற்று வாழும் நிலை மாறி, நிம்மதியாக வாழ வழி வகுத்தல், தமிழர்கள் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவ வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்படுதல்; தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுவதை தடுத்து நிறுத்துதல்; போரின்போது தங்கள் வீடுகளை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 1,25,000 தமிழர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கிக் கூறினர்.

இந்த விவரங்களை எல்லாம் கவனமுடன் கேட்டறிந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை, நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை, பயனுள்ளவை என்று மு.க.ஸ்டாலினிடம் கூறினார். மேலும், இந்த ஆதாரங்களும், ஆவணங்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகள் குறித்து மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு, இந்தியா ஆதரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில், தனது தலைமையிலான குழு ஒன்று வருகிற ஜனவரி மாதம் சென்று மேற்பார்வையிட இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

அதோடு, கருணாநிதி கையெழுத்திட்டு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருடன் விவாதித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.