செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிரங்கும் ரோவர் விண்கலம்: நேரடி ஒளிபரப்பு

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று தரையிறங்க இருக்கிறது.

 

பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.

இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்ய கடந்தாண்டு, நவம்பர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி ‌மையத்தில் இருந்து அட்லஸ் ராக்‌கெட் மூலம் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.

6 சக்கரங்களின் துணையோடும், ரோபாட் துணையோடும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் சுமார் 250 கோடியில் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும்.

நாளை தரையிறக்கம்: ரோவர் அனுப்பப்பட்ட 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க இருக்கிறது.

அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய நேரப்படி காலை 1.31 மணியளவில் ரோவர் தரையிறங்குகிறது. ரோவரில் உள்ள க்யூரியாசிட்டி என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வாகனம் தான் செவ்வாயில் தரையிறங்கி, செவ்வாய் கிரகம் முழுவதையும் ஆய்வு செய்து, அது குறித்த தகவல்களை அவ்வப்போது விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது.

சுமார் 2 மாதம் க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாய் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

உன்னிப்புடன் விஞ்ஞானிகள்: ரோவர் தரையிறங்க இருப்பதை முன்னிட்டு, ஒவ்வொரு அசைவையும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இப்போது வரைக்கும் ரோவர் தனது பாதையில் சரியாக போய்கொண்டு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒளிப்பரப்பு: ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் காட்சியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்கிறது நாசா விண்வெளி மையம்.

இது குறித்து நாசா இணை நிர்வாகி ஜான் கிரன்ஸ்பெல்டு குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுடன் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு புதிய மைல்கல்: ரோவர் நாளை வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டு விட்டால், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விண்வெளி மையம் எட்டிவிடும்.