சூப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி: ஆஸி. பாகிஸ்தான் அணிகள் மோதல்

இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் சூப்பர் 8 சுற்று முடிவுக்கு வருகிறது. அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் இன்று உறுதி செய்யப்படவுள்ளன.

சூப்பர் 8 போட்டியில் "குரூப் 2´ பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் கொழும்பில் இன்று நடைபெறும் போட்டியில் மோத இருக்கின்றன.

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் இச்சுற்றில் பங்கேற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும்.

இதனால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி முடிவைப் பொறுத்து பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேறுமா அல்லது அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது முடிவு செய்யப்படும். அதே நேரத்தில் அவுஸ்திரேலியா வென்றால் தங்கள் பிரிவில் மொத்தம் 3 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

அவுஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏனெனில் அவுஸ்திரேலிய அணி வலுவான ஓட்ட வீதத்தை பெற்றுள்ளது.