சுப்பர் ஓவரால் இலங்கைக்கு வெற்றி!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது சுப்பர் 8 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ரொபட் ஜேம்ஸ் நிக்கொலின் அதிரடித் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் ரொபட் ஜேம்ஸ் நிக்கொலின் 58 ஓட்டங்களையும் மார்டின் கம்பில் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றிபெற 175 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பாக டி.எம்.டில்ஷான் 76 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்றதால் இரு அணிகளுக்கும் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்களை பெற்றது. 14 ஓட்டங்களை பெற்றால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நியூசிலாந்து அணியால் 8 ஓட்டங்களை மட்டுமேபெற முடிந்தது.