சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்! இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்

யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது
இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.

ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர்.

நள்ளிரவு நேரம் உட்புகுந்த இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தில ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னால் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

26வயதுடைய கிங்குறாங்கொடையைச் சேர்ந்த பெண் தாதியான ஈ.ஏ.ஆர் பெர்னாண்டோ என்பவரே கையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமக்கு பாதுகாப்பான இடத்தில் விடுதியை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்த சட்டத்தில் நிறுத்துமாறும் கோரி இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ் போதனா வைத்திய சாலையில் உள்ள அனைத்து தாதியர்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்பேராட்டமானது காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்