சட்டவிரோதமாக சிகரெட் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்த 12 பேருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 17,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர், ஆணைக்கோட்டை, கல்வியங்காடு பகுதிகளில் மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பரிசோதகர்களினால் நேற்று திங்கட்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது 12 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த 12 பேரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினமே ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த ஒருவருக்கு 5,000 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கள்ளு விற்பனை செய்த 4 பேருக்கு தலா 500 ரூபா வீதம் 2,000 ரூபாவும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 7 பேருக்கு தலா 1,500 ரூபா வீதம் 10,500 ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் குறிப்பிட்டார்.