கைப்புள்ள வடிவேலுக்கு வாஸ்து பிரச்சினை!

வடிவேலுவை சினிமாவில் பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. ஆனாலும் சின்னத்திரையில் காமெடி சேனல்களிலும், வடிவேலுவை தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள்.

தான் இப்படி திரையை விட்டு விலகியிருப்பது வடிவேலுவுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது போலும். இதனால் தனது நிலைக்கு என்ன காரணம் என்று அவர் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கிறாராம்.

தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுதான் என்று நினைக்கிறாராம். அதன் காரணமாகவே புதிய வீடு ஒன்றில் குடியேற நினைக்கிறாராம் வடிவேலு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பங்கேற்ற விழாவில் வடிவேலு பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் மதுரையில் இருந்து மத்திய அழகிரியின் அன்பு கட்டளையை ஏற்று போகாமல் இருந்து விட்டாராம். ஒரு வேளை அவர் மட்டும் முதல்வர் விழாவுக்குப் போயிருந்தால் நிலைமையே மாறியிருக்கும் என்கிறார்கள்.

எல்லாம் வாஸ்து கோளாறுதான் என்று வடிவேலுவின் நலம் விரும்பிகள் கூறி வருவதால், அவர்கள் பேச்சை நம்ப ஆரம்பித்து விட்டாராம் வடிவேலு. இதனால், தனது சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர முடிவு செய்திருக்கிறார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாக கருதிய காமெடியன் விவேக் வீட்டிற்கு அருகிலேயே இப்போது ஒரு வீடு தயாராகிக் கொண்டிருக்கிறதாம் வடிவேலுவுக்கு.

ஆனால் மறுபக்கம், வாஸ்து பகவான் அவர் வாயிலேயே இருக்கிறார். ஆனால் அது தெரியாமல் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார் வடிவேலு என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.