கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்

 

சுற்றுலா மேற்கொண்டு கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த விபத்து பளையில் நேற்று முற்பகல் 9 மணி அளவில் இடம்பெற்றது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

கைதடி வளர்மதி கல்விக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளானது. பஸ் கண்ணாடிகளும் சேதமாகின. காயப்பட்ட 15 பேர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். ஏனையவர்கள் கைதடிக்குத் திரும்பிச் சென்றபோதும் அவர்களில் நான்குபேர் திடீர் சுகவீனமுற்றதனால் நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டனர்.

திருமதி ஏ.லிகிதா, திருமதி இ.தவமணி, திருமதி த.சசி மற்றும் செல்வி ம.சுவேதா ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தே.அமிலன், த.விமலாதேவி, நா.பிரதீப், சி.துஷாந்தினி, சே.சந்திரவதனி, த.யதுர்ஷன், த.டிலக்ஷன், யோ.பிரியா, ம.கலாமதி, சு.தேவி, சே.டிலக்ஷன், யோ. சுரேயுதன், செ.மதனரூபன், த.விக்னேஸ்வரன் ஆகியோரே கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.