கடலில் மூழ்கிய மீனவர் மீட்பு

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி கடலில் மூழ்கிய மீனவரொருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை பகல் 2 மணியளவில் பொலிகண்டி கடலில் இரு மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு திரும்பியபோது, படகு கவிழ்ந்த நிலையில் இவ்விருவரும் கடலில் மூழ்கியுள்ளனர்.

இருப்பினும் இவ்விருவரில் ஒருவர் வேறொரு படகில் கரை சேர்ந்த நிலையில், ஏனைய மீனவர்களுக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மற்றைய மீனவர் காப்பாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மீன்களின் எடை அதிகமாக காணப்பட்டதன் காரணமாக படகு கவிழ்ந்திருக்கலாமெனவும் யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி குறிப்பிட்டார்.