ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 26 வயது பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்து 4 பேர் கும்பல் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. 
 
பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து விட்டு பின்னர் பேருந்தில் பிலாஸ்பூருக்கு திரும்புவதற்காக திகாட்பூருக்கு வந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது 4 பேரும் அவருக்கு லிப்ட் தருவதாக கூறியுள்ளனர். 
 
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பயந்துபோன அவர் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் ஏறிய அந்த பெண்ணை அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு கடத்திச் சென்ற அக்கும்பல், வலுக்கட்டாயமாக அவரை மது குடிக்க வைத்துள்ளனர். 
 
பின்னர் 4 பேரும் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு அரை நிர்வாண கோலத்தில் கால்வாயில் தூக்கிப்போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பக்கம் சென்ற உள்ளூர் மக்கள் மயக்க நிலையில் அப்பெண் அரை நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
அதன் பிறகு அந்த பெண் உள்ளூர் சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிலாஸ்பூர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 
 
அவர் கொடுத்த புகாரின் பேரில் கடத்தல், கும்பலாக சேர்ந்து கற்பழிப்பு ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், நான்கு பேர் கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.