யாழ் ஊரெழுவில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கிளிசொச்சி,இராமநாதபுரம்,புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு இன்று திங்கட்கிழமை அதிகாலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறந்தவரின் சடலத்துக்கு அருகில் காணப்பட்ட கோடரி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொழில் நிமித்தம் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இவர் பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்ததாகவும் பின்னர் இடையிவ் அவரைக் காணவில்லை என்றும், நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.