உடுவில் பகுதியில் திருட்டு

உடுவில் பகுதியில் திருட்டு

உடுவில் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுன்னாகம் உடுவில் கிழக்கு பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இத் துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து பகல் வேளை வீட்டின் பின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கு சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது லப்டொப் கணினி ஒன்றும்,  பெறுமதியான 2 கையடக்கத் தொலைபேசிகளும், நகைகள், 65 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டில் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த உடைமைகள் கலைந்திருப்பது தெரியவந்தது. இவ் விடயம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஆதாரங்களையும் பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பான ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.