உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பஞ்சலிங்கம் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீர், சனிக்கிழமை அதிகாலையில் மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் புகுந்தது.

இதையடுத்து, கோவிலின் முன்புறம் உள்ள உண்டியல்கள் நீரில் அடித்துச் செல்லாதபடி கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். கோவிலில் பூஜைகளும் ரத்து செய்யப்பட்டன. அப் பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படகுப் போக்குவரத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.