இலங்கை பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த 150 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் 150 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (21) மாலை 3.40 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது.

இதில் மொத்தம் 150 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானம் புறப்பட தயாரான போது, விமானி கடைசியாக விமானத்தை பரிசோதனை செய்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார்.

உடனடியாக இதுபற்றி விமான நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் தாமதமாக இலங்கை புறப்பட்டு செல்லும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 150 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.