இலங்கை தளங்களை குறிவைத்து ஏவுகணைகளா?: இந்தியா மறுப்பு

இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் இலங்கையின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் இராணுவ தலைமையகங்களை குறிவைத்து நடத்தப்படுகிறது என்று ஒரு ஊடகத்தில் வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியா நீண்டகாலமாக உள்நாட்டு ஏவுகணை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்காக நடத்தப்படும் இந்த சோதனைகள், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல.

இந்திய ஏவுகணைகள் இலங்கை தளங்களை குறிவைப்பதாக வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்றது; ஜோடிக்கப்பட்டது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-இலங்கை இடையே நெருங்கிய உறவு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டெல்லி வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு திருப்தி அளிப்பதாக ராஜபக்ஷ கூறியது குறிப்பிடத்தக்கது.