இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய நபர் சென்னையில் கைது

இலங்கையில் இருந்து, 12 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திச் சென்ற நபரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கொழும்புவில் இருந்து, நேற்று காலை, 5:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் சென்றடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த, ஷேக் அப்துல்காதர், 38, என்ற பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றுலா விசாவில், இலங்கை சென்று வந்த அவரின் உடமைகளை சோதித்ததில், கறுப்பு நிற சாயம் அடித்து, அவர் பெட்டியில் மறைத்து வைத்திருந்த, மொத்தம், 380 கிராம் எடை கொண்ட, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க தகடுகள், பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்கத்துறை அதிகாரிகள், அப்துல் காதரை கைது செய்து விசாரிக்கின்றனர்.