இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் சீற்றம் ஏற்பட்டதால் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று காலை அவர்கள் மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை இராணுவத்தினர் 7 படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் இராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டினர். அவர்கள் மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கு இருந்து படகுகளில் கரை திரும்பினர். இலங்கை இராணுவத்தினர் கற்கள் வீசியதில் சில மீனவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இது குறித்து அதிகாரிகள் யாரிடமும் புகார் கூறவில்லை.

இலங்கை இராணுவத்தினர் மீன்பிடிக்க செல்லும்போது எல்லாம் தாக்குதல் நடத்தி வருவதால் இராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.