இன்று இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா?

இன்று இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா?

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் கலந்து கொள்வதற்காக பங்காளதேஷூக்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 21-ந் திகதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

இதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. இதில் நேற்று முன்தினம் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் தலைமையிலான முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை மிர்புரில் இன்று சந்திக்கிறது. முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியில் யாரும் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை. யுவராஜ்சிங் (33 ஓட்டங்கள் ), சுரேஷ் ரெய்னா (41 ஓட்டங்கள் ) ஆகியோர் மட்டுமே ஓரளவு நன்றாக ஆடினார்கள். 

வழக்கம் போல் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான ஷோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் ஒற்றை இலக்கில் ஏமாற்றினர். பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை 15 பேரையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது பீல்டிங் செய்த 11 பேர் தான் பேட்டிங்கும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 

களம் இறங்கும் வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 11 ஆக இருந்தால் போதும். மற்றபடி யாரையும் மாற்றி மாற்றி ஆட வைத்து கொள்ளலாம். முதலாவது ஆட்டத்தில் டோனி 14 பேரை விளையாட வைத்தார். பீல்டிங் செய்த அவர் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாட வரவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு மட்டும் களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது பயிற்சி ஆட்டத்திலும் பரீட்சாத்த முயற்சியை தொடர முனைப்பு காட்டி வரும் டோனி, இதிலும் அனைத்து வீரர்களையும் சோதித்து பார்ப்பார் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமாகும். இதில் வெற்றி பெறும் போது, அதே உத்வேகத்துடன், நேர்மறையான சிந்தனையுடனும் பிரதான சுற்று ஆட்டத்தை எதிர்கொள்ள முடியும்.