இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை

இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா’ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வாய்ப்புகள் குறைந்து போனதால் அண்மைக்காலமாக இலங்கை மற்றும் மியான்மரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ஐ.எஸ்.ஐ. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவை சுற்றி அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் தொடுக்கக் கூடிய யுக்தியுடனேயே இத்தகைய ஏற்பாட்டை ஐ.எஸ்.ஐ. செய்திருப்பதாகவும் இதன் ஒரு பகுதியே அண்மையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி விவகாரம் என்றும் ரா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தமீம் அன்சாரி வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற சித்திக் இன்னமும் பணிபுரிகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.