இத்தாலியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

இத்தாலியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. 

மெனூஸ் நகரில், நடைபெற்ற இந்தப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. 

முதல் கோலை, ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில், இத்தாலியின் க்ளாடியோ மார்ச்சீஸியோ அடித்து அணியை 1-0 எனும் முன்னிலைக்கு கொண்டு சென்றார். 

எனினும் இரண்டே நிமிடங்களின் பின்னர் இங்கிலாந்தின் ஸ்டூரிட்ஜ் ஒரு கோல் அடிக்க, 37 ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 1-1 எனும் சம நிலையை அடைந்தன.

இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில், இத்தாலியின் மெரியோ பாலடோலி, 50 ஆவது நிமிடத்தில், உயர எழும்பி வந்த ஒரு பந்தை தலையால் தட்டி கோல் வலைக்குள் தள்ள இத்தாலி 2-1 என்று முன்னிலை பெற்றது. 

அதன் பிறகு, பின்னடைவிலிருந்து மீண்டுவர இங்கிலாந்து அணி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இங்கிலாந்து அணி தமது அடுத்த போட்டியை ஜூன் 19ம் திகதி உருகுவே அணிக்கு எதிராகவும், இத்தாலி அணி ஜூன் 20 ஆம் திகதி கோஸ்ட்டாரிக்கா அணிக்கு எதிராகவும் ஆடவுள்ளன.