ஆசிய கிண்ணத்தை வெல்லப்போவது யார்?

12–வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இலங்கை அணிகள் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 

இலங்கை அணி அனைத்து லீக் (4 போட்டி) ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 வெற்றி ஒரு தோல்வி பெற்றது. இந்தியா அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றன. சொந்த மண்ணில் விளையாடிய வங்காளதேசம் ஒரு வெற்றி கூட பெறாமல் அனைத்து ஆட்டத்திலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. 

ஆசிய கிண்ண இறுதிப்போட்டி நாளை டாக்காவில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான்– இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் பானிஸ்தான் தோற்றது. 

இதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் முயற்சிக்கும். பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், மிஸ்பா– உல்–ஹக், உமர் அக்மல், அப்ரிடி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் அப்ரிடி இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். உமல் குல், சயீத் அஜ்மல், ஜூனைத்கான் போன்ற பவுலர்கள் உள்ளனர். 

இலங்கை அணியும் சம பலத்துடன் உள்ளது. அந்த அணி தோல்வியே சந்திக்காமல் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 

சங்ககரா, கேப்டன் மேத்யூஸ், திரிமன்னே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சில் ‘யார்க்கர்’ மன்னன் மலிங்கா மிரட்டுவார். அஜந்தா மெண்டீஸ், சென நாயக்கே ஆகியோர் சுழற்பந்தில் அசத்துவார்கள். 

ஆசிய கிண்ணத்தை இலங்கை 4 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கைப்பற்றி உள்ளன. 2012–ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் சம்பியன் பட்டம் பெற்றது. நாளை நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை தக்க வைக்கும் முனைப்புடன் உள்ளது.