மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அவையின் 21 ஆவது அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் உறுப்பினர் ஆனோல்ட் சார்பாக உறுப்பினர் பரஞ்சோதி குறித்த பிரேணையினை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையினை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வழிமொழிந்ததுடன் இது குறித்து வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவிக்கையில்,

 

குறித்த பிரேரணையினை அவையில் எடுத்துக் கொள்வது முக்கியமானது. இது குறித்து குறிப்பிட்ட குடும்பத்தினர் என்னிடமும் தெரிவித்திருந்தனர்.

அவர்களிடம் மேல் முறையீடு செய்யுமாறும் பொதுமன்னிப்பு வழங்குமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் என்றும் கூறியுள்ளேன்.

அதுபோல முறையீடும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜீ.பி.எஸ் இல் அவர்கள் இருந்தது வேறு இடத்தில் இருந்தமையும் வெளிப்படையாகியுள்ளது.

எனவே சரியான தரவுகள் இன்றி நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . எனவே குறித்த பிரேரணை குறித்து வடக்கு மாகாண சபை ஜனாதிபதிக்கு அறிவுறுத்துவது முக்கியமானது என்றார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களும் போதைப் பொருள் பரிமாறிக் கொண்டனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. எனினும் அவர்களில் இந்திய மீனவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவர் தொடர்ந்தும் தண்டனை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.