நம்ம ஊரு வைத்தியம் - புளி!

நம்ம ஊரு வைத்தியம் - புளி!
நாம அன்றாடம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியமா சொல்லணும்னா இந்த புளி இருக்கே... இது இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது. புளியை வெச்சு குழம்பு, ரசம், துவையல் செய்றதோட புளிசாதமும் பண்ணுவாங்க. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கு.
கை, கால், இடுப்புனு உடம்புல ஏதாவது ஓரிடத்துல அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ.. புளியை நல்லா கரைச்சி, உப்பு சேர்த்து கொதிக்க வெச்சு கொழகொழனு கூழ்பதத்துக்கு தயாரிச்சுக்கணும். அடிபட்ட இடத்துல இந்தக் கூழை பொறுக்குற சூட்டுல பத்து போட்டா... வீக்கமும், சுளுக்கும் சர்னு சரியாயிடும்.
வெயில் காலங்கள்ல நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்குனு வாட்டி எடுத்துடும். ஆண்குறியில சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் வரும். இந்த மாதிரி சமயங்கள்ல... புளியங்கொட்டையை முழுசாவோ... இல்லை, அதோட தோலை மட்டுமோ எடுத்து வாயில போட்டு மென்னு தின்னா... உடனடி குணம் கிடைக்கும்.
ஆளை உருக்குற கணைச்சூடு உள்ளவங்க... புளிய இலையை எடுத்து அதோட சின்ன வெங்காயத்தை சேர்த்து இடிச்சி, சாறு பிழிஞ்சி 100 மில்லி அளவுக்கு சாப்பிடணும். வாரம் ஒரு தடவைனு 3 முறை இப்படி சாப்பிட்டா... கணைச்சூடு தணியும். இதை செய்றதால வயித்துக்கோளாறும் சரியாகும். இந்த சாறை குடிச்ச பிறகு, 3 மணி நேரத்துக்கு தண்ணியைத் தவிர வேற எதையும்  சாப்பிடக்கூடாது.
உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால துடிக்கறவங்களுக்கு புளியை தண்ணியில ஊறப்போட்டு நல்லா கரைச்சி, அதோட பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்துக் குடிக்க கொடுத்தா... உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலங்கள்ல இந்தக் கரைசல் கைகண்ட மருந்தா இருக்கும்.
புளியம்பூ, புளியம்பிஞ்சுனு மரத்துல இருக்கறத பார்த்துட்டா... குஷி யோட அப்படியே பறிச்சு சாப்பிடாதவங்க குறைவு. அது ரெண்டையும் எடுத்துவந்து, தேவையான அளவு காய்ஞ்ச மிளகாய், உப்பு சேர்த்து இடிச்சி காய வைக்கணும். இதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா... உடல் உஷ்ணம் தணியறதோட... நல்ல பசியும் உண்டாகும்.
முக்கியமான ஒரு விஷயம்... புளியில இப்படி நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும், அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சுங்கற மாதிரி, ஒரு சில நோய்களுக்கு புளி ஆகாது. அதனால சமயமறிஞ்சு பயன்படுத்தறது நல்லது!